கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோவில் யானைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா?-வனவிலங்கு கமிட்டியினர் நேரில் ஆய்வு

கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோவில் யானைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை வனவிலங்கு கமிட்டியினர் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2021-08-27 21:00 GMT
அழகர்கோவில்,

கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோவில் யானைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை வனவிலங்கு கமிட்டியினர் நேரில் ஆய்வு செய்தனர்.

கள்ளழகர் கோவில்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள யானையை ஆய்வு செய்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்து சமய அறநிலைய துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று யானை அறிவியல் ஆய்வாளர் மற்றும் மாநில வனவிலங்குகள் கமிட்டியை சேர்ந்த டாக்டர் என்.சிவகணேசன் கள்ளழகர் கோவிலில் உள்ள சுந்தரவல்லி தாயார் யானையை பரிசோதனை செய்தார்.
யானையின் இருப்பிடம், அதற்கு வழங்கப்படும் உணவுகள் விவரம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அப்போது யானை எவ்வாறு விரைவாக நடக்கின்றது? எப்படி உணவு உண்கிறது? உடல்நிலை உள்ளிட்ட ஆய்வும் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன் கோவில்

ஆய்வின்போது கோவில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான தி.அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள் நாராயணி, பிரதீபா, செந்தில் குமார், உள்துறை பேஷ்கார் கருப்பையா மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
இதே போல மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்வதி யானையின் ஆரோக்கியம் குறித்து கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பார்வதி யானையின் உடல் ஆரோக்கியம் குறித்து பாகனிடம் கேட்டறிந்தனர். 2 கோவில் யானைகளின் உடல் ஆரோக்கியம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்