மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க ரூ.500 கோடி இலக்கு

மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு உயர்க்கல்வி கடன் வழங்க ரூ.500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.;

Update:2021-08-29 01:43 IST
மதுரை,
மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு உயர்க்கல்வி கடன் வழங்க ரூ.500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இணையதளம்

மாணவர்கள் எளிதாக கல்வி கடன் வழங்குவதற்காக மத்திய அரசு www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. இந்த இணையத்தளத்தில் இந்தியா அல்லது வெளிநாடுகளில் படிப்பதற்கு தேவையான கல்வி கடனுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை படிப்பு, முதுநிலை படிப்பு, தொழில் படிப்பு, தொழிற்பயிற்சி படிப்பதற்கு மாணவர்கள் கல்வி கடன் பெற அதில் பதிவு செய்யலாம். நாம் படிக்க விரும்பும் படிப்பிற்கு எந்த வங்கி கடன் தருகிறதோ, அதில் நேரிடையாக விண்ணப்பிக்க முடியும். அதில் ரூ.4 லட்சம் வரை பெறப்படும் கடன்களுக்கு எந்த ஜாமீனும் தர தேவையில்லை. ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான கடன் தொகைக்கு ஒரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும்.
அந்த ஒரு நபர் பெற்றோர் அல்லது உறவினராக கூட இருக்கலாம். ரூ.7½ லட்சத்திற்கு மேல் பெறப்படும் கடன்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. இந்த இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி கடனை வங்கிகள் நிராகரித்து விட முடியாது.

ரூ.500 கோடி இலக்கு

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க இந்தாண்டு ரூ.500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் கல்வி கடனுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வசதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள 357 மேல் நிலைப்பள்ளிகளிலும் கல்வி கடன் விழா 31-ந் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் பள்ளிபொறுப்பாளர்களுக்கான பயிற்சி கூட்டம் காணொளி காட்சி மூலம் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்து பேசும் போதும், நிதி இல்லை என்பதற்காக மாணவர்கள் படிப்பது தடைப்பட்டு விடக்கூடாது. இந்த இணையதளத்தில் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நிச்சயம் கடன் தொகை கிடைக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன், முன்னோடி வங்கி மேலாளர் அனில் உள்பட 400 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்