கீழே கிடந்த காலாவதியான உணவு பொருளை சாப்பிட்ட மாணவர் சாவு

அலங்காநல்லூரில் விளையாட சென்ற போது கீழே கிடந்த காலாவதியான உணவு பொருளை எடுத்து சாப்பிட்ட மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் வாந்தி எடுத்தார்.

Update: 2021-08-29 21:02 GMT
அலங்காநல்லூர்,

அலங்காநல்லூரில் விளையாட சென்ற போது கீழே கிடந்த காலாவதியான உணவு பொருளை எடுத்து சாப்பிட்ட மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் வாந்தி எடுத்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காலாவதியான உணவு பொருள்

அலங்காநல்லூரை சேர்ந்தவர் சின்னாண்டி. இவரது மகன் குணா (வயது 13). 8-ம் வகுப்பு மாணவர். இவரது நண்பர் சசிகுமார் (11). 7-ம் வகுப்பு மாணவர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் விளையாட சென்றனர்.அங்கு கீழே கிடந்த காலாவதியான ரூ.5 மதிப்புள்ள உணவு பொட்டல பாக்கெட்டுகளை எடுத்து சாப்பிட்டனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் திடீரென்று வாந்தி எடுத்தனர். வயிற்று போக்கால் அவதிப்பட்டனர்.

சாவு

உடனே பதறி போன பெற்றோர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் குணா இறந்தார். சசிகுமாரை ஆஸ்பத்திரியில் டாக்டர் பரிசோதித்த போது எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்தது. அந்த மாணவருக்கு சிகிச்சை அளித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்