சித்தோடு ஆவின் அலுவலகம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சித்தோடு ஆவின் அலுவலகம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர்,
சித்தோடு ஆவின் அலுவலகம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் கொள்முதல் விலையை...
கால்நடைகளுக்கு தேவையான கலப்பு தீவனம், உலர்தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும் பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.52 என கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைத்து உள்ளதால், ஆவினுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்படும். இதனை ஈடுகட்ட தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பாலுக்கான பாக்கி ரூ.500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். பாலுக்கான பணத்தை வங்கியில் செலுத்தாமல் ஆரம்ப சங்கத்திலேயே வழங்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றியங்கள் பிரித்தல், புதிய ஊழியர்களை நியமித்தல் ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலை சேர்த்து வழங்க வேண்டும். கலப்பு தீவனங்களை தரமானதாகவும், 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தோடு ஆவின் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சித்தோடு ஆவின் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்லி கவுண்டர், ஆனந்தராஜ், செல்வராஜ், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில தலைவர் முனுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் விஜயகுமார், உதவி செயலாளர் பெரியசாமி உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.