காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-09-05 20:39 GMT
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை அவ்வப்போது யானைகள் கடப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி வழியாக இந்த சாலையில் கரும்பு பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து யானைகள் அதில் கரும்புகளை தின்பது தொடர்கதையாகி வருகிறது. 
இந்த நிலையில் நேற்று மாலை காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு ஒற்றை யானை வந்தது. பின்னர் அந்த வழியாக வந்த வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்தது. பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் யானை அங்கும், இங்குமாக உலா வந்தது. இதன்காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த சாலையில் 15 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்