ஈரோடு மாவட்டத்தில் 219 இடங்களில் முகாம்: 21 ஆயிரத்து 850 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 219 இடங்களில் நடந்த முகாமில் 21 ஆயிரத்து 850 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-09-05 21:15 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 219 இடங்களில் நடந்த முகாமில் 21 ஆயிரத்து 850 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
கோவேக்சின் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் போர்க்கால அடிப்படையில் போடப்பட்டு வருகிறது.
முதலில் முன் கள பணியாளர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
21,850 பேருக்கு...
மாவட்டத்தில் இதுவரை பெரும்பாலும் கோவிஷீல்டு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் நேற்று கோவேக்சின் முதல் மற்றும் 2-ம் டோஸ் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் 20 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 219 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் ஒவ்வொரு மையங்களிலும் தலா 200 பேர் வீதம் 4 ஆயிரம் பேருக்கும், புறநகர் பகுதியில் 179 இடங்களில் 17 ஆயிரத்து 850 பேருக்கு என மொத்தம் 21 ஆயிரத்து 850 பேருக்கு கோவேக்சின் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. வழக்கம்போல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேலும் செய்திகள்