சுமைதூக்கும் தொழிலாளர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து; சகோதரர்கள் கைது
மதுரை மார்க்கெட்டில் பொருட்களை ஏற்றி இறக்குவதில் ஏற்பட்ட தகராறில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை
மதுரை மார்க்கெட்டில் பொருட்களை ஏற்றி இறக்குவதில் ஏற்பட்ட தகராறில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
3 பேருக்கு கத்திக்குத்து
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன்(வயது 23), பிரசாந்த் (23), குமார்(34). இவர்கள் அனைவரும் பரவை மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கும் அங்கு பணிபுரியும் சக தொழிலாளர்களுக்கும் லாரியில் வரும் பொருட்களை ஏற்றி இறக்குவதில் முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று பரவை மார்க்கெட்டில் தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அது தொடர்பாக இருதரப்பினரும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். அப்போது அவர்கள் இருதரப்பையும் சமரசம் செய்ய நண்பர்கள் முயன்றுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் செல்லூர் தாகூர்நகர், ரெயில்வே தண்டவாளம் அருகே அவர்கள் 3 பேரும் எதிர்தரப்பை சேர்ந்த சகதொழிலாளர்களான வளர்ராஜா, அவரது தம்பி ரஞ்சித்குமார், சுந்தர், விஜய், கூலு ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சகோதரர்கள் கைது
அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டன், பிரசாந்த், குமார் ஆகியோரை குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செல்லூர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வளர்ராஜா, அவரது தம்பி ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.