2ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம்

குடியிருப்புக்கு இடம் கேட்டு வருகிற 2-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கல்லார் பழங்குடியின மக்கள் அறிவித்து உள்ளனர்.;

Update:2021-09-08 23:28 IST
வால்பாறை

குடியிருப்புக்கு இடம் கேட்டு வருகிற 2-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கல்லார் பழங்குடியின மக்கள் அறிவித்து உள்ளனர். 

பழங்குடியின மக்கள் 

வால்பாறை அருகில் உள்ள தாய்முடி தேயிலை தோட்ட எஸ் டேட் பகுதிக்கு அருகில் அடர்ந்த வனப்பகுதிக்குள் 23 குடும்பங் களை சேர்ந்த 70 பேர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் காடர் இனத்தை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியின மலைவாழ் மக்கள் ஆவார்கள். 

கடந்த 2018-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு, விரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு அவர்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து 2 கி.மீ. தூரம் உள்ள தெப்பக்குளமேடு பகுதியில் குடியிருப்புகளை அமைத்தனர். 

குடியிருப்பு அகற்றம் 

ஆனால் அந்தப்பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட் பட்டது என்பதாலும், வனச்சட்டத்தில் இடம் இல்லை என்பதால் குடியிருப்பு அகற்றப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டனர். 

எஸ்டேட் குடியிருப்பு தங்களின் கலாசார நடைமுறைகளை கடைபிடித்து வாழ்வது இயலாத காரியம் என்பதால் தாங்கள் ஏற்கனவே குடியிருந்து வந்த தெப்பக்குளமேடு பகுதியிலேயே குடியிருக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

2-ந் தேதி போராட்டம் 

இதையடுத்து நிலஅளவை செய்து இடம் கொடுக்க தேசிய புலிகள் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகளாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் அந்த கிராம மக்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

அதில் 23 குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தங்களுக்கு குடியிருக்க இடம் கேட்டு வருகிற 2-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

தீர்வு காணவில்லை 

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, கடந்த 3 ஆண்டு களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. எனவே போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றனர்.

இந்த கூட்டத்தில் கல்லார் கிராம மக்களின் தலைவர்கள் சக்தி வேல், நாராயணன், போராட்டகுழு தலைவி ராஜலட்சுமி, மாவட்ட பழங்குடியினர் கண்காணிப்பு குழு உறுப்பினர் தங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்