தகராறை விலக்க சென்ற வாலிபர் படுகொலை

திருப்பரங்குன்றம் அருகே கோஷ்டி மோதல் தகராறை விலக்க சென்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையை தடுக்க முயன்ற பெண்ணின் கைவிரல் துண்டானது.

Update: 2021-09-08 20:12 GMT
திருப்பரங்குன்றம்,
 
திருப்பரங்குன்றம் அருகே கோஷ்டி மோதல் தகராறை விலக்க சென்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையை தடுக்க முயன்ற பெண்ணின் கைவிரல் துண்டானது.
முன்விரோதத்தால் தகராறு
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகர் பாரத ஜோதி காலனியில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தேவி (55) இவர்களது மகன் அருண்குமார் (வயது 22). இவர் மதுரை முத்துப்பட்டியில் உள்ள தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அருண்குமார் நேற்று இரவு திருப்பரங்குன்றம் ஓம்சக்திநகர் ஜெ.ஜே நகர் மலைமேடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (38), சரவணன் (32) ஆகிய 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வெங்கடேசன், சரவணன் ஆகிய இருதரப்பினரும் 2கோஷ்டியாக பிரிந்து வாய்தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாலிபர் படுகொலை
இந்த நிலையில் அருண்குமார் தகராறு செய்யாதீர்கள் என்று கூறினாராம். அதில் ஒருவர் அதை கேட்க நீ யாரு? என்று கூறி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அருண்குமாரின் தலையில் வெட்டினார். அதில் பலத்த காயம் அடைந்து துடி, துடிக்க சம்பவ இடத்திலேயே அருண்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இதே சமயம் அருண்குமாரை வெட்ட விடமால் தடுக்க முயன்ற ராதிகா (28) என்பவருக்கு ஒரு கை விரல் துண்டானது. இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். கைவிரல் துண்டிக்கப்பட்ட ராதிகாவும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்