விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம்

பொள்ளாச்சியில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமானது.

Update: 2021-09-09 17:36 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமானது. 

விநாயகர் சதுர்த்தி 

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் இருப்பதால் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப் பட்டு உள்ளதுடன், ஊர்வலம் நடத்தவும் அனுமதி வழங்கவில்லை. பொது மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்துக்கொள்ளவும், அவர்கள் நீர்நிலைகளில் கரைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

விற்பனை மந்தம் 

பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை எப்போதுமே அதிகளவில் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகள் காரணமாக பொள்ளாச்சியில் விநாயகர் சிலை விற்பனை மந்தமாக உள்ளது. 

இந்த சிலைகள் அளவுக்கு தகுந்தாற்போல விலை இருந்தது. அதன்படி ரூ.50 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. விற்பனை கடுமையாக சரிந்ததால் அதன் விலையும் குறைந்து இருந்தது. இதன் காரணமாக சிலைகளை செய்து விற்பனை செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:- 

விலை குறைவு 

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக வீடுகளில் சிலைகள் வைக்க தகுந்தவாறு சிறிய  அளவிலான சிலைகள் செய்வதில் கடந்த 6 மாதமாக ஈடுபட்டு வந்தோம். ஆனால் பொதுமக்கள் யாரும் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. 

இதனால் சிலைகளை வாகனங்களில் ஏற்றி மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அது இயலாத காரியம். எனவே விற்பனை ஆக வேண்டும் என்பதற்காக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்