பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2021-09-12 22:06 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணை
தமிழகத்தின் 2-வது பெரிய அணை பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்ைட வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. 
தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த மாதம் 15-ந்  தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் ஈரோடு அருகே உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது உடைப்பு சரி செய்யப்பட்டதால் நேற்று காலை 6 மணிக்கு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் இருந்து வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
102 அடியாக நீடிப்பு
நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 829 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்துக்காக வினாடிக்கு 488 கன அடியும், உபரி நீராக வினாடிக்கு 112 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்