டாஸ்மாக் கடையில் தகராறு: போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் தகராறை விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு
ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் தகராறை விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டாஸ்மாக்கில் தகராறு
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதிப்பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 45). கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக (தலைமை காவலர்) பணி செய்து வருகிறார். இவர் நேற்று பிற்பகலில் நிலைய பணியில் இருந்தார். அப்போது சுண்ணாம்பு ஓடை பவானி ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தகராறு நடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்தது.
டாஸ்மாக் கடையில் இருந்து அவசர போலீஸ் எண் 100-க்கு அழைக்கப்பட்ட புகார் என்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீஸ் ஏட்டு ராஜூ புறப்பட்டார். அங்கு டாஸ்மாக் கடையின் முன்பு சிலர் கூடி இருந்தனர். அவர்களிடம் சென்று ஏட்டு ராஜூ நடந்த சம்பவத்தை விசாரித்துக்கொண்டு இருந்தார்.
ஏட்டுக்கு அரிவாள் வெட்டு
அப்போது இங்கு வந்த ஒரு நபர், எதிர்பாராதவிதமாக ஏட்டு ராஜூவை தாக்கினார். அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் 3 முறை வெட்டினார். இதில் நெஞ்சு மற்றும் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ஏட்டு ராஜூ ரத்த வெள்ளத்தில் துடித்தார். அதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ராஜூவை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே ஏட்டு ராஜூவை அரிவாளால் வெட்டிய நபரையும் அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது உடனடியாக எந்த விவரத்தையும் கூறவில்லை.
போலீஸ் சூப்பிரண்டு ஆறுதல்
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும் கிடைத்தது. அவர் யார்? எதற்காக போலீஸ் ஏட்டுவை வெட்டினார்? அவருக்கும் டாஸ்மாக் கடை தகராறுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா, திட்டமிட்டு போலீஸ் ஏட்டு வெட்டப்பட்டாரா ? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
போலீஸ் ஏட்டு ராஜூ வெட்டப்பட்ட தகவல் அறிந்த உடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் ஏட்டு ராஜூவை பார்த்து ஆறுதல் கூறினார்கள். மேலும் அவருக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களை போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்துச்செல்லப்பட்டு, ஏட்டு ராஜூவுக்கு மருத்துவம் செய்யப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
பரபரப்பு
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, டாஸ்மாக் கடை தகராறு தொடர்பாக வந்த புகரை விசாரிக்க சென்றபோது ஒருவர் ஏட்டு ராஜூ மீது தாக்குதல் நடத்தி வெட்டி உள்ளார். அதிர்ஷ்டவசமாக உயிருக்கு பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
போலீஸ் ஏட்டு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் ஈரோட்டில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.