ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த குழு-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-09-13 20:14 GMT
மதுரை,

ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தரமற்று இருப்பதால்...

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன், ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் சிலவற்றை விசாரித்த நீதிபதி புகழேந்தி நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த முன்ஜாமீன், ஜாமீன் மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. முன்ஜாமீன் கோரியவர்கள் தங்களின் மீதான வழக்கிற்கு ஏற்ப அபராதத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.மேலும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பொது வினியோகத்திட்டத்தில் அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதன் மூலம் பொது வினியோக திட்டத்திற்கான நோக்கமே வீணாகிறது. சமையலுக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு அரிசி தரமற்று இருப்பதால் தான் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

குழு அமைக்க வேண்டும்

எனவே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதிபடுத்தும் வகையிலும் நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவின் உயர் அதிகாரிகளைக்கொண்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். இக்குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்