சத்தியமங்கலம் பண்ணாரி அருகே முகாமிட்டுள்ள யானைகள்- வாகனங்கள் வேகமாக செல்லவேண்டாம் என வேண்டுகோள்

சத்தியமங்கலம் பண்ணாரி அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-09-14 21:21 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பண்ணாரி அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி அடிக்கடி வனத்தை விட்டு வெளியே வருகின்றன.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனைச்சாவடி அருகே யானைகள் தனது குட்டிகளுடன் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறியது. அடர்ந்த வனப்பகுதிக்கு செல்லாமல் யானை கூட்டம் ரோட்டு ஓரத்திலேயே உலாவியது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மீண்டும் பண்ணாரி சோதனை சாவடி அருகே குட்டிகளுடன் யானைகள் ரோட்டுக்கு வந்து முகாமிட்டன. 
எச்சரிக்கை
யானைகளை பார்த்ததும், வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டார்கள்.  சுமார்  40 நிமிடங்கள் யானைகள் ரோட்டிலேயே அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தன. அதன்பின்னர் காட்டுக்குள் யானைகள் சென்றுவிட்டன. 
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, அடிக்கடி யானைகள் கூட்டமாக ரோட்டுக்கு வந்து நின்று விடுகின்றன. அதனால் பண்ணாரி சாலையில் வாகனங்களில் வருபவர்கள் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். 
 மேலும் வாகனங்களை நிறுத்தி யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்