கோபி அருகே பரபரப்பு; விஷம் குடித்து விட்டு கிணற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- திருப்பூரை சேர்ந்தவர்கள்

கோபி அருகே விஷம் குடித்துவிட்டு, கிணற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.

Update: 2021-09-15 22:00 GMT
கடத்தூர்
கோபி அருகே விஷம் குடித்துவிட்டு, கிணற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது. 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருடைய மனைவி தங்கமணி (வயது 36). இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேலு. இவருடைய மகன் அஸ்வின் (21). திருமணம் ஆகாதவர். இவர் வேலம்பாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் தங்கமணி வேலை பார்த்தார். 
அப்போது  இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இவர்களுடைய பழக்கம் தங்கமணியின் கணவருக்கும், அஸ்வினின் வீட்டாருக்கும் தெரியவந்தது. அதனால் இருவரையும் உறவினர்கள் கண்டித்தார்கள். 
கிணற்றில் குதித்தார்கள்...
உறவினர்களுக்கு தெரிந்துவிட்டதால் அவமானமாகிவிட்டதே என்று அஸ்வினும், தங்கமணியும் வேதனைப்பட்டார்கள். `இனி வாழ்வது கேவலம்` என்று இருவரும் முடிவு செய்ததாக தெரிகிறது.  
இந்தநிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மேவாணிக்கு வந்தார்கள். 
அதன்பின்னர் அஸ்வினும, தங்கமணியும் விஷம் குடித்துவிட்டு, அருகே இருந்த விவசாய கிணற்றில் குதி்த்து விட்டார்கள். 
உடல்கள் மீட்பு
அந்த பகுதியில் வேலை செய்துகொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்தார்கள். பின்னர் கோபி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்கள். 
அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தார்கள். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி  கிணற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது தங்கமணியும், அஸ்வினும் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டது தெரிந்தது. 
பின்னர் 2 உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேலே    கொண்டு வந்தார்கள். 
விசாரணை
இதையடுத்து போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். 
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகமும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். திருப்பூரை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி கோபி அருகே வந்து விஷம் குடித்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்