பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி

பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி ஆனார்.

Update: 2021-09-23 20:49 GMT
பவானி
பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி ஆனார். 
மாணவி
பவானி அருகே உள்ள சித்தோடு செங்குந்தபுரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (38). இவர்களுக்கு அபர்ணா (15), தாரணி (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் தாரணி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 
குடும்ப தகராறு காரணமாக அய்யாசாமியை விட்டு பிரிந்து செல்வி அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் 2 மகள்களுடன் கடந்த ஒரு மாதமாக வசித்து வருகிறார். 
சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தாரணி அந்த பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றுவிட்டு தன்னுடைய வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆவின் பால் ஏற்றி வந்த வேன் ஒன்று தாரணியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் தாரணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த தாரணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காலிங்கராயன்பாளையம் மனக்காட்டூரை சேர்ந்த வேன் டிரைவர் சச்சின் என்பவரை கைது செய்தனர். வேன் மோதி பள்ளிக்கூட மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்