ஆறுமுகநேரியில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ஆறுமுகநேரியில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-01 12:19 GMT
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காணியாளர் தெரு கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் தனமுத்து மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். செல்வியும் கூலி வேலை செய்து வந்துள்ளார். ஸ்டீபன்ராஜூக்கு மதுகுடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் ஸ்டீபன்ராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மதுபோதையில் மனைவி மற்றும் மகனையும் அவர் அடித்து உதைத்துள்ளார். இதில் மனமுடைந்த செல்வி மகனுடன் அருகில் உள்ள தாய் சென்று விட்டாராம்.
இதில் மனமுடைந்த ஸ்டீபன்ராஜ் விஷம் குடித்து வீட்டு வாசலில் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து போனார்.
இது தொடர்பாக செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்