ரியல் எஸ்டேட் அதிபர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

ரியல் எஸ்டேட் அதிபரை பீர் பாட்டிலால் மர்மநபர்கள் தாக்கினர்.

Update: 2021-10-02 20:37 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 52). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காரை எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பன்னீர்செல்வத்தை வழிமறித்து பீர் பாட்டிலால் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் கடைவீதியில் உள்ள இடத்தை பன்னீர்செல்வம் ஒருவருக்கு விலைக்கு வாங்கி கொடுத்ததாகவும், அதில் தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை ஒரு பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் வாடகைக்கு கேட்டதாகவும், அதன் உரிமையாளர் கொடுக்க மறுத்ததால், இதற்கு ரியல் எஸ்டேட் அதிபர் பன்னீர்செல்வம் தான் காரணம் என்று, அந்த பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் தூண்டுதலின் பேரில் மர்ம கும்பல் தாக்கியிருக்கலாம் என்றும் பன்னீர்செல்வம் புகார் கொடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்