கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்தது அம்பலமானது.

Update: 2021-10-03 19:35 GMT
ஆதனக்கோட்டை, 
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள போரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 30). இவருக்கும் கறம்பக்குடி அருகே உள்ள மாங்கான்கொல்லைபட்டியை சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
இந்தநிலையில் தனது கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக நந்தினியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நந்தினியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். நந்தினி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் நந்தினி வேலை பார்த்தபோது வாராப்பூர் ஊராட்சியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இந்தநிலையில் பாண்டித்துரைக்கும், நந்தினிக்கும் திருமணம் ஏற்பட்டது.
பழைய காதலனை பிரிய மனமில்லாத நந்தினி போரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயம் கணவர் பாண்டித்துரைக்கு தெரியவரவே தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே பாண்டித்துரையை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 20-ந் தேதி அவரை கொலை செய்துள்ளார். 
மேலும் நந்தினியின் கள்ளக்காதலனை பிடித்து விசாரித்ததில் நந்தனியிடம் பழகியதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று கூறி வருகிறார். இந்த கொலை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்