ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக பெய்த மழை
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று முன்தினமும் மழை பெய்தது.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று முன்தினமும் மழை பெய்தது.
இடி-மின்னலுடன் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து நேற்று முன்தினம் 4-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.
ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் 3.20 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் நின்றது. பின்னர் 3.30 மணிக்கு இடி -மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் மாநகரில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.
சத்தியில் அதிக மழை
பல்வேறு பகுதிகளில் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். கருங்கல்பாளையம் பகுதியில் ஒரு சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சத்தியமங்கலம் - 53, பவானிசாகர் - 38.6, எலந்தகுட்டைமேடு - 38.2, கோபி - 35.2, குண்டேரிபள்ளம் - 34.2, ஈரோடு - 34, கொடிவேரி - 31.2, நம்பியூர் - 29, கொடுமுடி - 27.4, பவானி - 27, பெருந்துறை - 17, அம்மாபேட்டை - 16, வரட்டுப்பள்ளம் - 16, கவுந்தப்பாடி-12, மொடக்குறிச்சி - 11, சென்னிமலை - 4. அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 53 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக சென்னிமலையில் 4 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.