மயக்க பொடி தூவி 4 வீடுகளில் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் அருகே மயக்க பொடி தூவி 4 வீடுகளில் மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். 20-க்கும் மேற்பட்ட நாய்களும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-04 19:07 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் தினேஷ்(வயது 35), பெருமாள் (65), கங்காதுரை(45), கலியன்(65). இவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் புகுந்தனர். பி்ன்னர் அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டிருந்தவர்களின் மீது மயக்க பொடியை தூவினர். 
தொடர்ந்து அவர்கள் பீரோக்களை உடைத்து தினேஷ் வீட்டில் இருந்து ¾ பவுன் நகை, பெருமாள் வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் கலியன், கங்காதுரை ஆகியோரின் வீடுகளில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளை 

இந்த நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்த தினேஷ் உள்ளிட்ட 4 வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது மீது மயக்க பொடி தூவி நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மர்மநபர்கள், தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க அதன் மீதும் மயக்க பொடியை தூவி சென்றுள்ளனர். 
இதனால் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் மயக்க மடைந்தன. இது குறித்த தகவலின் பேரில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்