பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு

பவானிசாகர் அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.

Update: 2021-10-09 15:21 GMT
பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் போயர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 23). தொட்டம்பாளையம் ரேடியோ ரூம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அவருடைய மகன் மெர்லின் (21). கார்த்திகேயனும், மெர்லினும் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் மெர்லினை கார்த்திகேயன் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பவானிசாகர் வழியாக அன்னூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பவானிசாகர் பகுதியில் லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார்சைக்கிளும் எதிரே வந்த ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார்த்திகேயனும், மெர்லினும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்