இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்த்திட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்த்திட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி கேட்டுக்கொண்டார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-10-18 00:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா நெல் பயிருக்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.473 செலுத்த வேண்டும். நெற்பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 15-ந்தேதி ஆகும்.

எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய பொது சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி காப்பீடு செய்யலாம்.

பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், கணிப்பொறி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் அல்லது விதைப்புச்சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், பயிர் காப்பீடு செய்வதற்கான முன்மொழிவு விண்ணப்பத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம். காப்பீடு செய்த உடன் விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர், சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு எண் விவரங்களை உடனடியாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.எனவே, எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்த்திட உடனடியாக பயிர் காப்பீடு தொகை செலுத்திட நெல் சாகுபடி விவசாயிகள் அனைவரும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்