அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கில்கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2021-10-20 20:37 GMT
மதுரை, 

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்பாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில், எனது காளை 3-வது பரிசு பெற்றது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளை பங்கேற்றது. அதிக புள்ளிகளைப் பெற்ற எனது காளைக்கு முதல்  பரிசாக காரும், சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அந்த பரிசு வழங்கப்படவில்லை. எனவே அந்த பரிசுகளை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பின்னர் மனுதாரர் வக்கீல் பாண்டியராஜ் ஆஜராகி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பல மாதங்கள் ஆகியும், அதில் அறிவிக்கப்பட்ட பரிசை உரிய காளைக்கு அளிக்காதது ஏற்புடையதல்ல, என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரரின் மனுவை 6 வாரத்தில் பரிசீலித்து, மனுதாரரின் காளை முதல் பரிசு பெற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவரது கோரிக்கை உண்மை எனில் பரிசை 2 வாரத்தில் வழங்க மதுரை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்