வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-10-22 20:14 GMT
மதுரை,

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

10.5 சதவீத உள்ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருப்பதாவது:-
 தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மொத்தமாக 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10.5 சதவீதத்தை வன்னியர் சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடாக வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
இதனால் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை, எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டது. முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
எனவே வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து, அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இதே கோரிக்கையுடன் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக தினந்தோறும் விசாரித்து வருகின்றனர்.
இதே நீதிபதிகள் முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மனுக்களை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தனர்.
========

மேலும் செய்திகள்