மதுரையில் ஒரே நாளில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-10-23 20:54 GMT
மதுரை,

மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி திருவிழா

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காகவும், பரவலை தடுப்பதற்காகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. முதலில் முன்களப்பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிடோருக்கும், அதன்பின்னர் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி திருவிழா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அன்றைய தினங்களில் வழக்கத்தை விட அதிகமான நபர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தினர். மதுரையில் நடந்த முகாம்களிலும் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் மூலம் மதுரையில் தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவிகிதம் வேகமாக அதிகரித்தது.

1,200 இடங்கள்

இதற்கிடையே தமிழகம் முழுவதும் நேற்று 6-வது கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மதுரையிலும் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1,200 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடந்தது. மதுரை ரெயில் நிலையத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த சிறப்பு முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகளை செலுத்தினர். இதுபோல், வீடு, வீடாகவும் சென்று அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. நேற்று நடந்த இந்த சிறப்பு முகாம்களில் 82 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரையில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 49 ஆயிரத்தை எட்டி உள்ளது.
இதுபோல் மாவட்ட சுகாதார கிட்டங்கியில் 2 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்