பழைய கார் குடோனில் பயங்கர தீ விபத்து

பழைய கார் குடோனில் பயங்கர தீ விபத்து;

Update:2021-10-28 19:23 IST
கோவை

கோவை ராமநாதபுரத்தில் பழைய கார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.

பழைய கார் குடோன்

கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் உள்ளது. இங்கு பழைய கார் குடோன் செயல்பட்டு வருகிறது. அத்துடன் இங்கு பழைய கார்களின் உதிரி பாகங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இங்குள்ள குடோனில் பழைய கார்கள் அனைத்தும் ஒரு இடத்தில் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அங்கு பழைய கார்களில் அகற்றப்பட்ட பொருட்கள், கழிவுகள் என அனைத்தும் ஒரு இடத்தில் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டு இருந்தன.

புகை வந்தது 

இந்த நிலையில் இந்த பழைய கார் குடோன் பகுதியில் இருந்து புகை வெளியே வந்தது. இதனை பார்த்த குடோன் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை, நிலைய அலுவலர் வேலுசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கூடுதல் வாகனங்கள் வரவழைப்பு 

அந்த குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டு இரு்நத கார்களில் உள்ள பஞ்சுகள், டயர்கள் உள்ளிட்டவற்றில் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது. 

இதையடுத்து தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அங்கு பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே கணபதி, பீளமேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

பல லட்சம் பொருட்கள் நாசம் 

மேலும் தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீர் லாரிகள் மூலமும் வினியோகம் செய்யப்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய கார்கள், அதன் உதிரி பாகங்கள் என ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. 

அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. குடோன் இருக்கும் பகுதியில் மின்சார வசதி இல்லை. இருந்த போதி லும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்