மதுரை விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் சிக்கியது

மதுரை விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் கடத்தி வந்தவரை சுங்கத்துறையினர் பிடித்தனர்.

Update: 2021-10-28 20:37 GMT
மதுரை
மதுரை விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் கடத்தி வந்தவரை சுங்கத்துறையினர் பிடித்தனர்.
மதுரை விமான நிலையம்
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் மதுரையில் இருந்து துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை நடைபெறுகிறது. இந்தநிலையில் துபாயில் இருந்து நேற்று மதுரைக்கு வந்த தனியார் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சுங்கப்புலனாய்வு துறை அதிகாரிகள், துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை தனித்தனியாக சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் பல்வேறு கட்டங்களாக பரிசோதனை செய்தனர்.
சந்தேகம்
அப்போது அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர் கொண்டுவந்த உடைமைகளையும் பரிசோதித்தனர். அப்போது வைத்திருந்த பையில் செவ்வக வடிவில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட 5 தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் துபாயில் இருந்து அதனை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
ரூ. 2½ கோடி
அவரிடமும் இருந்த 5000 கிராம்(அதாவது 5 கிலோ) எடை கொண்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணைக்காக போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரத்து 462 என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுபோல், மதுரை விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ கணக்கில் தங்கம் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்