சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2021-11-09 16:30 GMT
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்ரா (வயது 48). விவசாயி. இவர் மாடுகளும் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் தன்னுடைய நிலத்தில் நேற்று மாலை 5 மணியளவில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்து வந்த ஒரு சிறுத்தை திடீரென வீரபத்ராவை தாக்கியது. உடனே கையில் வைத்திருந்த கம்பால் சிறுத்தையை அடித்து விரட்டினார். ஆனாலும் சிறுத்தை தாக்கியதில் வீரபத்ராவின் கை, முதுகு, கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. 
இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வீரபத்ராவை சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்