கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கிலோ ரூ.79-க்கு விற்கப்பட்டது.
காய்கறி சந்தை
கிணத்துக்கடவு-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உற்பத்தி செய்யும் தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, புடலங்காய் உள்பட பல்வேறு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.
இந்த சந்தைக்கு தற்போது தக்காளி வரத்து மிகவும் குறைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ தக்காளி ரூ.70-க்கு ஏலம்போனது.
தக்காளி விலை உயர்வு
அதுபோன்று நடந்த ஏலத்துக்கும் தக்காளி வரத்து குறைந்து இருந்தது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கிலோ ரூ.79-க்கு விற்பனையானது. அதுபோன்று மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று இந்த சந்தையில் வெண்டைக்காய் ரூ.50, கத்தரிக்காய் ரூ.100, மிளகாய் ரூ.30, புடலங்காய் ரூ.30, பாகற்காய் ரூ.40, சுரைக்காய் ரூ.35-க்கு விற்பனையானது.
வரத்து குறைவு
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தக்காளி மொத்த விலையாக ரூ.79-க்கு விற்பனையானது. ஆனால் சில்லரை விலையாக கடைகளில் ரூ.85 முதல் ரூ.95 வரை விற்கப்படுகிறது. அதுபோன்று கத்தரி ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் ஆகும் என்றனர்.