முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கோவை வருகை

முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கோவை வருகை;

Update:2021-11-21 21:55 IST
கோவை

23 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) கோவை வருகிறார். இதையொட்டி 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ரூ.89 கோடியில் நலத்திட்ட உதவி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கோவை வருகிறார். இதற்காக அவர், இன்று (திங்கட்கிழமை) காலை 11.15 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். அங்கு அவருக்கு, அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். 
அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் வ.உ.சி. மைதானத் திற்கு மதியம் 12 மணிக்கு வருகிறார். அங்கு அவர், பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.89 கோடியில் நிறைவேற்றப்பட்ட 120 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

இதையடுத்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.500 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.440 கோடியில் 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். 

ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல்

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1.20 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் இருந்து கார் மூலம் திருப்பூர் புறப் பட்டு செல்கின்றார். அங்கு சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிறைவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். 

அவர், மாலை 6 மணிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர் 6.30 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப் படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 7.30 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு அங்கேயே தங்குகிறார்.

முதலீட்டாளர்கள் மாநாடு

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் கொடிசியா முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். மதியம் 1 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  கோவை விமான நிலையத்திற்கு வந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கோவை வ.உ.சி. மைதானத்தில் விழா மேடை பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்