செங்கல்பட்டு அருகே ரவுடி வெட்டிக்கொலை

செங்கல்பட்டு அருகே ரவுடி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-11-24 08:55 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு முருகேசனார் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). இவர் மீது செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

வழக்கு ஒன்றில் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்த விக்னேஷ், செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் விக்னேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், விக்னேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விக்னேசுக்கும், அன்வர் என்பவருக்கும் அப்பகுதியில் யார் பெரிய ஆள்? என்பதில் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்