தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-24 17:26 GMT


அடிக்கடி மின்தடை

கூடலூர் பகுதியில் மின் வினியோகத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கூடலூர் ஹெல்த்கேப், அரசு மேல்நிலைப் பள்ளி, கெவிப்பாரா உள்பட பல பகுதிகளில் காலை நேரத்தில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சீரான மின்வினியோகம் வழங்க வேண்டும்.
அய்யப்பன், கூடலூர்.

மின்விளக்குகள் இல்லை

  கோவை மாநகராட்சி 27 வது வார்டு சின்னவேடம்பட்டி அத்திப் பாளையம் ரோட்டில் கவுமார மடாலயம் பகுதியில் இருந்து சரவணம்பட்டி - துடியலூர் இணைப்பு ரோடு வரை மின்விளக்கு கள் இல்லை. இதனால் இங்கு இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. எனவே இந்த வழியாக செல்லும் பொதுமக்களின் நலன்கருதி அங்கு உடனடியாக மின்விளக்குகள் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
  சம்பத், சின்னவேடம்பட்டி.

சேறும் சகதியுமான சுரங்கபாதை

  பொள்ளாச்சி கோலார்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் உள்ள சுரங்கபாதையில் மழைநீர் கழிவுகளுடன் தேங்கி நிற்கிறது. சேறும் சகதியுமாக காட்சி யளிப்பதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் அந்த வழியாக செல்பவர்கள் சகதிக்குள் சிக்கி கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அங்கு தேங்கி உள்ள சேறு சகதிகளை அகற்ற வேண்டும்.
  திருமூர்த்தி, பொள்ளாச்சி.

வேகத்தடை வேண்டும்

  கோவை மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியின் முன்பு வேகத்தடை இல்லை. இதனால் இந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் மாணவர்கள் சாலையை கடந்து செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மாணவர்களின் நலன்கருதி இந்த பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும்.
  இளங்குமரன், கெம்பநாயக்கன்பாளையம்.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

  கோவை ஹோப் காலேஜ் ஆகாஷ் நகரில் இருந்து மசக்காளி பாளையம் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள் சிக்கி படுகாயத்துடன் உயிர் தப்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  குமாரவேல், சிங்காநல்லூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் மெயின் பாலத்தின் கீழ்ப்பகுதியில் மழைநீருடன் சாக்கடை தண்ணீர் கலந்து நிற்கிறது. அத்துடன் புதர்கள் வளர்ந்து உள்ளதால் அங்குள்ள சொக்கலிங்கநாதர் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
  ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.

பஸ்கள் இயக்கப்படுமா?

  கோவை காந்திபுரத்தில் இருந்து தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் வரை 94 ஏ, எஸ்.3பி என்ற 2 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது அந்த பஸ்கள் இயக்கப் படுவது இல்லை. இதனால் முத்திபாளையம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. அத்துடன் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்த பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.
  பார்த்திபன், சுண்டபாளையம்.

ஆள்இறங்கும் குழியால் ஆபத்து

  கோவை மாநகராட்சி 33-வது வார்டு வி.கே.கே.மேனன் ரோடு சித்தாபுதூர் பகுதியில் சாலையோரத்தில் பாதாள சாக்கடையில் ஆள்இறங்கும் குழியில் உள்ள மூடி திறந்து கிடக்கிறது. அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக செல்பவர்கள் உள்ளே தவறி விழ வாய்ப்பு உள்ளது. அத்துடன் கொசுத்தொல்லை அதிகமாக ஏற்பட்டு வருகிறது. எனவே திறந்து கிடக்கும் இந்த அபாய குழியை உடனடியாக மூட வேண்டும்.
  குமார், சித்தாபுதூர்.

தொற்று நோய் பரவும் அபாயம் 

  கோவை மாநகராட்சி 32-வது வார்டு நேதாஜி நகர், உதயா நகர், ஜீவா நகர், ஸ்ரீ சக்தி விநாயகர் நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த பகுதியில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வீடுகளுக்குள் தவளை, நத்தை உள்ளிட்டவையும் வருகின்றன. எனவே இந்த பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
  வெள்ளியங்கிரி, பீளமேடு.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை ஆவாரம்பாளையம் மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள சோப்பு கம்பெனி அருகே ஏரளாமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. அத்துடன் நாய்கள் குப்பைகளை சாலையின் நடுவே இழுத்து போடுவதால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  ரவிச்சந்திரன், கோவை.


  ------------------

மேலும் செய்திகள்