அனுமதி இல்லாமல் நடந்த சினிமா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்

அனுமதி இல்லாமல் நடந்த சினிமா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்

Update: 2021-11-25 14:10 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் அனுமதி இல்லாமல் நடந்த சினிமா படப்பிடிப்பை போலீசார் பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சினிமா படப்பிடிப்பு

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காமராஜர் வீதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு அழகு நிலையம் முன் சைரன் பொருத்திய போலீஸ் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையிலான ஒரு ஜூப் நின்று கொண்டிருந்தது. மேலும் பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது சினிமா படப்பிடிப்பு என்பது தெரியவந்தது. மேலும் புதிய இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கத்தில் தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன் ஆகிய படங்களில் நடித்த அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு என்பது தெரியவந்தது. 

அனுமதி இல்லாமல்

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் படப்பிடிப்பு நடத்தியவர்களுடன் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு போலீஸ் மற்றும் நகராட்சியில் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையில் படப்பிடிப்பு குழுவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பின்னர் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறாக, அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்த கூடாது கூறி பாதியில் நிறுத்தினர். இதையடுத்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைரன் பொருத்திய வாகனத்தை படக்குழுவினர் அவசர, அவசரமாக எடுத்து சென்றனர். 

மேலும் செய்திகள்