பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைய கணக்கெடுப்பு பணி

பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைய கணக்கெடுப்பு பணி மணிமங்கலம், கரசங்கால் கிராமத்தில் தொடங்கியது.

Update: 2021-11-25 14:26 GMT
முதல்-அமைச்சர் உத்தரவு

பழங்குடியினர், 3-ம் பாலினத்தவர், மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும். அதற்கான கணக்கெடுப்பு பணி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் 2 வாரத்துக்குள் மேற்கொள்ள வேண்டும் என, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணியை தொடங்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதிகாரிகள் ஆய்வு

கலெக்டர் உத்தரவின் பேரில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி இந்திரா நகரில் வசிக்கும் 65 இருளர் குடியிருப்பு பகுதிக்கு, குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் நேரில் சென்று அடிப்படை வசதிகள், மற்றும் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் அனைத்து நலத்திட்டங்களும் உரிமைகளும் அவர்களுக்கு வழங்கிடும் பொருட்டு அதற்கான கணக்கெடுப்பு பணியினை தொடங்கினர்.

கணக்கெடுப்பின் போது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், மணிமங்கலம் ஊராட்சி செயலர் கோபால், கரசங்கால் ஊராட்சி செயலர் நாசர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். இதேபோல், கரசங்கால் பகுதியில் வசிக்கும் 45 நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து அவர்களிடமும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்