மகளுக்குபாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2021-11-25 19:17 GMT
மதுரை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மகளுக்கு பாலியல் தொல்லை
மதுரையை சேர்ந்த ஒருவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவர் சொந்த ஊருக்கு வந்திருந்த போது, பள்ளியில் படித்து வந்த தனது மகள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அந்த சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை பள்ளிக்கூட ஆசிரியைகள் அறிந்தனர். இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது, அவர் தனது தந்தையின் நடத்தை குறித்து ஆசிரியைகளிடம் தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். இதன்படி அவர்கள் விசாரித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்தனர்.
சாகும் வரை சிறை
இந்த வழக்கு மதுரை மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
அப்போது சம்பந்தப்பட்ட சாட்சிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார்.
விசாரணை முடிவில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.61 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் செய்திகள்