மதுரை மாவட்டத்தில் 20 இடங்களில் கியூ பிரிவு போலீசார் திடீர் சோதனை

மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் நபரை தேடி மதுரை மாவட்டத்தில் நேற்று 20 இடங்களில் கியூ பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2021-11-25 19:47 GMT
மதுரை
மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் நபரை தேடி மதுரை மாவட்டத்தில் நேற்று 20 இடங்களில் கியூ பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தாரா?
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகிவிட்டார். 
அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்துவிட்டதாகவும், மதுரையை சேர்ந்த சிலர்தான் அவரை அந்த இயக்கத்தில் சேர்த்து விட்டதாகவும், எனவே அவர்களிடமிருந்து தனது மகனை மீட்டு தருமாறு கார்த்திக்கின் தாயார் தேனி கியூ பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் தேனி கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து கார்த்திக்கை மதுரையில் தேட முடிவு செய்தனர். 
20 இடங்களில் சோதனை
அதன்படி மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்த ராஜா, அவருடைய தாயார் வீடு, அகராதி, ஜெகன், மனுவேல்அமல்ராஜ், பிரசன்னா உள்ளிட்ட 7 பேர்களின் வீடுகள், அலுவலகங்கள், அவரது உறவினர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்தனர்
அதன்படி மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர், தேனூர், மதுரை பீ.பி.குளம், அண்ணாநகர், கோமதிபுரம், கூடல்நகர், உசிலம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட 20 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த இடங்களில் கார்த்திக் பற்றிய தகவல்களும், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் சோதனை மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்