கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-11-26 00:49 GMT
ஈரோடு, நவ
கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். கலெக்டர் செய்திக்குறிப்பு 
கடன் அட்டை
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை வளர்போரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த கால்நடை வளர்க்கும் 10 ஆயிரத்து 320 விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கால்நடை பராமரிப்புக்காக கிசான் கிரெடிட் கார்டு வழங்கி, கடன் உதவி செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெற மாவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
ஆவணங்கள்
எனவே கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் பயன்பெற ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் தங்களது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் நில ஆவணங்கள் ஆகிய ஆவணங்களின் நகலுடன், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து 2 நகலில் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் தொகை வழங்கப்படும். எனவே கால்நடை வளர்ப்போர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்