சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றி வேட்பாளர் பிரமாணப்பத்திரம் பெறக்கோரி வழக்கு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றி வேட்பாளர் பிரமாணப்பத்திரம் பெறக்கோரி வழக்கு
மதுரை, நவ.27-
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தாரின் சொத்து விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்கு, தண்டனை விவரங்களை வேட்புமனுவுடன் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிரமாண பத்திரம், பழைய நடைமுறையை பின்பற்றித்தான் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இவற்றில் வேட்பாளர், வாழ்க்கைத் துணை, வேட்பாளரை சார்ந்தவர்களின் கடந்த 5 வருட வருமானம், வருவாய் ஆதார விவரங்கள், அரசின் துறைகளில் எடுக்கப்படும் ஒப்பந்த விவரங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், ஆதார் எண், ஆதார் முகவரி போன்ற விவரங்கள் கேட்கப்படவில்லை.
எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிக்க பிரமாண பத்திரத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும். ஆனால் ஏற்கனவே நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே அந்த உத்தரவுகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தவும், அதுவரை நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என இடைக்கால உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு மற்றும் பிராமண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அடிப்படையில் பெற்று, அதனை தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுசம்பந்தமாக தமிழக தேர்தல் கமிஷனிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.