ஈரோட்டில் பரிதாபம்; 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சாவு

ஈரோட்டில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தது.;

Update:2021-11-27 02:22 IST
ஈரோடு
ஈரோட்டில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தது. 
4 வயது குழந்தை
ஈரோடு பெரியவலசு நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (வயது 38). சீட் கவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நான்சி. இவர்களுக்கு திமூன் அந்தோணி (4) என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்களுடைய வீட்டின் முன்பு 8 அடி ஆழம் உள்ள தரைதள தண்ணீர் தொட்டி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் யாரோ காவிரி தண்ணீர் வருகிறதா? என்று தண்ணீர் தொட்டி மூடியை திறந்து பார்த்துள்ளனர். பின்னர் மூடியை சரியாக மூடாமல் சென்றுவிட்டனர். அப்போது வீட்டின் வாசல் பகுதியில் நின்று விளையாடி கொண்டு இருந்த திமூன் அந்தோணி மதியம் 2 மணி அளவில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. இதனை யாரும் கவனிக்கவில்லை.
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சாவு
இதைத்தொடர்ந்து மதியம் 2.45 மணி அளவில் சாப்பிடுவதற்காக தாமஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகனை காணாததால் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் குழந்தை கிடைக்காததால் சந்தேகம் அடைந்த அவர், தொட்டியை திறந்து உள்ளே பார்த்தார். அப்போது தண்ணீரில் மூழ்கியபடி குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்