மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வனத்துறை ஊழியர் போக்சோவில் கைது
மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வனத்துறை ஊழியர் போக்சோவில் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வனத் துறை ஊழியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாலியல் தொல்லை
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்கள் குறித்து 1098 என்ற எண்ணில் குழந்தை கள் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு தனக்கும், தனது 13 மற்றும் 11 வயது தங்கைகளுக்கு தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்தார்.
வனத்துறை ஊழியர்
இதையடுத்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த குழந்தைகளுக்கு அவர்களின் தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் 16 வயது சிறுமி புகார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் தந்தையை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
போக்சோவில் கைது
மேலும் மகள் என்று பார்க்காமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையை போன்று தந்தையே தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.