ஈரோட்டில் குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Update: 2021-11-30 20:25 GMT
ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அமைச்சர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மோசிக்கீரனார்வீதியில் கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்தநிலையில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மோசிக்கீரனார் வீதியில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் காலிங்கராயன் வாய்க்காலையொட்டி செல்லும் சாக்கடையை பார்வையிட்டார். சாக்கடையை அகலப்படுத்தி குடியிருப்பு பகுதிக்குள் புகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாருக்கு அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உள்பட பலர் உடனிருந்தனர்.
உயர்மின் கோபுரங்கள்
ஈரோடு மாதவகிருஷ்ணவீதி, லட்சுமி நாராயணன் வீதியை சேர்ந்த பொதுமக்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-
கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் புகாத வகையில் சாக்கடையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகர் பகுதியில் சாக்கடைகள் தூர்வாரப்பட்டு கழிவுநீர் தேங்காமல் விரைந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். சாக்கடைகளும் உடனடியாக தூர் எடுக்கப்பட்டு, இந்த பகுதியில் கழிவு நீர் தேங்காமல் விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்கால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வாய்க்கால் பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்படும். காலிங்கராயன் வாய்க்கால் கரைக்கு மக்கள் சுலபமாக சென்று வர படிக்கட்டுக்கள் அமைத்து தரப்படும். சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் குப்பைகளை சாக்கடையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்

மேலும் செய்திகள்