கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவர் கைது

அந்தியூர் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-01 14:50 GMT
அந்தியூர் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு
அந்தியூர் அருகே உள்ள அத்தாணியை சேர்ந்தவர் சதீஷ்குமார். கால்நடை டாக்டர். கடந்த மாதம் 6-ந் தேதி சதீஷ்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம், 3 கால் கொலுசு, வெள்ளி காமாட்சி விளக்கு, 1 பவுன் தங்க காசு ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து சதீஷ்குமார் ஆப்பக்கூடல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
மேலும் திருட்டு நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். அதை வைத்து பழைய குற்றவாளிகளை பிடித்து விசாரித்தனர். இதில் அத்தாணி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 38) என்பவர் டாக்டர் வீட்டில் இருந்து பணம், பொருட்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் நடத்திய விசாரணையில் அவர் மீது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளநோட்டு மாற்றிய வழக்கு மற்றும் பல்வேறு வீடுகள் புகுந்து திருடிய வழக்கு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட பணம், 1 பவுன் தங்க காசு, கால் கொலுசுகள் 3, ஒரு வெள்ளி காமாட்சி விளக்கு ஆகியவை மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்