ஈரோடு மாவட்டத்தில் திருட்டுப்போன 57 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஈரோடு மாவட்டத்தில் திருட்டுப்போன 57 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.;
ஈரோடு மாவட்டத்தில் திருட்டு போன மற்றும் மாயமான செல்போன்களை மீட்பதற்கான நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மாவட்டத்தில் திருட்டுப்போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார். இதில் 57 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 157 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.