நண்பரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர்

திருவொற்றியூரில் நண்பரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-03 10:14 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை, மல்லிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 33). ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (28). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

சுந்தர், தனது வியாபாரத்துக்காக நண்பர் சதீஷ்குமாரிடம் மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதை 3 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை பல மாதங்கள் ஆகியும் திருப்பி தரவில்லை என தெரிகிறது.

சதீஷ்குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்கும் போது தராமல் ஏமாற்றி வந்த சுந்தர், சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் நண்பரிடம் கடன் வாங்கி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பெரும்பாக்கம் வரதபுரம் பகுதியில் இருந்த சுந்தரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்