மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்

அந்தியூரில் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-04 20:25 GMT
அந்தியூரில் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆசிரியர்
சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 39). இவர் அந்தியூர் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள தனியார் பயிற்சி கல்வி நிலையத்தில் (டியூசன் சென்டர்) ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இதற்காக அவர் தனது குடும்பத்துடன் அந்தியூரில் தங்கி உள்ளார். இவரிடம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பில் தோல்வியுற்ற 16 வயது மாணவி படித்து வருகிறார். 
மயங்கி விழுந்தார்
நேற்று வழக்கம்போல் தனியார் பயிற்சி கல்வி நிலையத்துக்கு வீட்டில் இருந்து அந்த மாணவி புறப்பட்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக எண்ணமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் அந்த மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதை கேட்டதும் அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 
கைது
இதுகுறித்த புகாரின் பேரில் பவானி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அந்த மாணவியை ஆசிரியரான லோகநாதன் பாலியல் பலாத்காரம்  செய்தது,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் லோகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் லோகநாதனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்