கஞ்சா கடத்திய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் கைது
கஞ்சா கடத்திய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் கைது;
பொள்ளாச்சி
அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்ததாக முன்னாள் ஊர்க்காவல் படை வீரரை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன சோதனை
திண்டுக்கல்லில் இருந்து அரசு பஸ்சில் பொள்ளாச்சிக்கு கஞ்சா கடத்தி வருவதாக கோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீஸ்காரர் முனியாண்டி ஆகியோர் கொண்ட குழுவினர் அந்தியூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பஸ்சில் இருந்த ஒருவரது பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை விசாரணை நடத்தினார்கள்.
கஞ்சா பறிமுதல்
அதில் அவர் பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் செடி முத்தூரை சேர்ந்த மூர்த்தி (வயது 32) என்பதும், முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மூர்த்தியை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.