கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்
கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்
உடுமலை,
உடுமலையில் திறந்த வெளியில் இறைச்சிகழிவுகளை கொட்டவந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இறைச்சிக்கடை உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம்
உடுமலை நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் மற்றும் இறைச்சிக்கழிவுகள் ஆகியவற்றை பொது இடங்களில் திறந்த வெளியில் கொட்டக்கூடாது. இந்த நிலையில் உடுமலை நகரில் பொள்ளாச்சி சாலையில் பாலம் அருகே ஒரு வாகனம் மாட்டிறைச்சிக்கழிவுகளை கொட்டுவதற்காக வந்தது. அந்த வாகனத்தை சிலர் சிறைப்பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ரூ.2ஆயிரம் அபராதம்
இதுகுறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சிக்கழிவுகள், தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், ராஜேந்திரா சாலையில் உள்ள அந்த மாட்டிறைச்சிக்கடைக்கு சென்று, அந்த கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.