தியாகராயநகர் பிருந்தாவன் தெருவில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு
தியாகராயநகர் பிருந்தாவன் தெருவில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் விழுந்தது.;
சென்னை தியாகராயநகர் துரைசாமி பாலத்தில் இருந்து அசோக்நகர் வரை இணைக்கும் முக்கிய சாலையாக பிருந்தாவன் தெரு இருந்து வருகிறது. காலை மற்றும் மாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இந்த முக்கிய சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக திடீரென சாலையின் நடுவில் பெரிய பள்ளம் விழுந்தது.
சுமார் 3 அடி அகலம் கொண்ட இந்த பள்ளத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அசோக்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பள்ளத்தை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெருநகர சென்னை மாநகராட்சி, குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றுத்துறை அதிகாரிகள் சாலையில் விழுந்த பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் இந்த பள்ளம் ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.