காஞ்சீபுரம், செங்கல்பட்டில் உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
செங்கல்பட்டு,
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாகவும், கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட தலைவர் தாட்சாயிணி தலைமை தாங்கினார், செயலாளர் ஹரிகிருஷ்ணன், துணைத்தலைவர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சாலைமறியலால் மதுராந்தகம்-செங்கல்பட்டு இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல் மாதாந்திர உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி தர வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.